Friday 16 February 2018

பார்பி: ஹாக்கியும் காமமும் கலந்த கதை

      



சரவணன் சந்திரனின் நான்காவது நாவலான "பார்பி"யை வாசித்தேன். முந்தைய நாவல்களின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் வழியே தன்னை சுயபரிசேதனைக்கு உட்படுத்தி தன் படைப்புலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

சரவணன் சந்திரனின் பலம் நாவலுக்காக அவர் தேர்வு செய்யும் கதைகளம். "ஐந்து முதலைகளின் கதையில்" தைமூர் நாட்டில் தொழில்முனைவோராய் செல்பவனின் பிரச்சனைகளையும், "ரோலக்ஸ் வாட்சில்" தொழிலதிபர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் தரகு வேலை செய்பவனின் வாழ்வையும், "அஜ்வாவில்" போதை உலகத்தில் திளைப்பவனின் சித்திரம் மற்றும் மாற்று வேளாண்மையில் வெற்றி கொண்டவர்களின் சாதனை என்று புதிய புதிய களங்களைத் தொட்டிருப்பார். இந்த "பார்பி" நாவலிலும் கூட தமிழில் அதிகம் எழுதப்படாத ஹாக்கி விளையாட்டைக் கதைகளமாகத் தேர்வு செய்துள்ளார். அவரே முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் என்பதால் தன்னுடைய அனுபவங்களிலிருந்து நாவலை எழுதியுள்ளது மற்ற நாவல்களைக் காட்டிலும் இந்த நாவல் கூடுதல் நெருக்கத்தைக் கொடுக்கிறது.

இந்த நாவலில் வரும் கதைச் சொல்லிக்கு இரண்டு எதிர்பார்ப்புகள் உள்ளது. ஒன்று ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவில் விளையாடி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கெளரவமான அரசு வேலையில் சேர்வது. மற்றொன்று கதைச்சொல்லி சிறிய வயதிலிருந்து அவன் நேசிக்கும் பார்பி பொம்மையின் சாயலையொத்த காதலியோடு களவி கொள்வது

சாதாரணமாக பார்த்தால் எளிய ஆசைகளாகத் தான் தோன்றும். ஆனால் தீப்பொட்டித் தொழில்சாலையிலும், பட்டாசு ஆலைகளிலும் அல்லல்படும் கந்தக பூமியில் வாழும் ஏழைக் குடும்பங்களில் பிள்ளைகள் குறித்த அதிகபட்ச எதிர்பார்ப்பு அரசு வேலை மட்டும் தான்

விளையாட்டு துறை காமத்தை விலக்கப்பட்ட கனியாக வைத்திருக்கிறது. ஆனால் சரிவிகித உணவோடு கடுமையாக பயிற்சி செய்த உடலும் பதின் வயதும் தினவெடுத்து ததும்பும்  ஊசலாட்டத்தினோடே தேசிய அளவில் வீரர்களைத் தேர்வு செய்வதில் நிகழும் அரசியலில் தப்பி கதைசொல்லி தன் லட்சியத்தை அடைந்தானா என்பதே நாவலின் மையம்.

கோவில்பட்டி செண்பகவல்லியம்மனின் தேரை இழுப்பதில் எழுந்த சாதிய மோதல் விளையாட்டு மைதானத்திலும் எதிரொலிக்கிறது. பள்ளி மாணவர்களிடையே இந்த சாதிய மோதல் எத்தகைய வன்முறையைத் தூண்டுகிறது என்பதையும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு இணையான திறமை வாய்ந்தவர்கள் வறுமையாலும், வன்முறையாலும், தேர்வு குழுவின் பாராபட்சத்தாலும் கூலிவேலைக்கு சென்று கொண்டிருக்கும் அவலங்களையும் நூட்பமாகச் சொல்லி செல்கிறார்.

திமிர் தனம் செய்யும் சித்தப்பா, பாசமான சித்தி, மைதானத்தைப் பராமரிக்கும் மார்க்கர், ரெளடியான ஜெகன் அண்ணன், மகனை கொன்றவனை பலி வாங்கும் வரை கூந்தலை முடிய மாட்டேன் என விரிந்த தலையோடு திரியும் தாய்( பாஞ்சாலி?! ), கண்டிப்பும் பாசமும் நிறைந்த கோச் என நாவலில் வரும் சின்ன கதாப்பாத்திரங்கள் கூட  இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது சிறப்பு

சரவணன் சந்திரனின் மொழி நடை அருவியிலிருந்து சுழித்துக் கொண்டு ஓடும் புது வெள்ளம் போல தன் அனுபவப் பரப்பின் சேகாரங்களையெல்லாம் அடித்துக் கொண்டு ஓடுகிறது. " விளையாடும்போது கேலரியைப் பார்க்கதே மவனே" , " ஏதாவது ஒரு அப்ஷன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைத்தியமாகி விடுவோம்" , " எதிலிருந்தாவது விடுபட விரும்பினால் அதை துச்சமாக நினை. பல நேரங்களில் விளையாட்டு வீரனுக்கு தன்னுடைய ஆங்காரம்தான் சிறந்த தோழன்என்ற அனுபவத் தெறிப்புகள் நாவலோடு ஒன்ற வைக்கிறது.


இந்த நாவலில் சீன பார்பி பொம்மையைக் கதைசொல்லி எவ்வளவு நேசிக்கிறான். மற்றவர்களுக்குத் தெரியாமல் எவ்வாறு பாதுகாக்கிறான் என்று திரும்ப திரும்ப செல்வதன் மூலமாக அதை குறியீடாக மாற்ற முயல்கிறார் சரவணன் சந்திரன். அது நாவலில் தன்னியல்பாகப் பொருந்தாமல் கொஞ்சம் துருத்திக் கொண்டு தெரிவது மட்டுமே இந்த நாவலின் பலவீனம் என நினைக்கிறேன். மற்ற படி  இவரின் நாவல்களைப் படித்து முடிக்கையில் வாசிப்பு இன்பம்( Reading Pleasure) அதிகம் கிடைக்கும். பார்பி நாவலிலும் அதற்கு குறையில்லை. நம்பிக்கையோடு வாசிக்கலாம். பார்பி நம்மை ஏமாற்ற மாட்டாள்.

லைலா எக்ஸ்: பெண்ணியமும் தலித்தியமும் இணையும் புள்ளி

                                                                                               

                                                                                                                       

பொங்கல் விடுமுறையில் லைலா எக்ஸின் "பிரதியின் நிர்வாணம்" என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். இந்த ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் இது. ஏற்வாடியில் நடந்த மக்கள் கலை இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட இந்த நூலை ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு இலக்கிய வட்டம் பதிப்பித்துள்ளது

இந்த தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள் உள்ளது. இதில் ஆறு கதைகள் காதல், காமம் சார்ந்த உணர்வுகளின் தீவிரத்திற்குள் சுழலும் பெண்களின் அக நெருக்கடிகளையும், பதின் வயதின் துவக்கத்திலேயே அவர்களின் உடல்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளையும் எவ்வித பாசாங்குகளும் அற்று நேரடியாக பேச முனைகிறது. மற்ற இரண்டு கதைகள் தலித் பெண்கள் தங்கள் அடையாளங்களிலிருந்து விலகி மேலெழுந்து வர போராடுவதும் அதை உயர்சாதி மனமோபாவம் எதிர் கொண்ட விதங்களையும் மிக அழுத்தமாக பதிவு செய்கிறது. பெண்ணியமும் தலித்தியமும் இணையும் புள்ளி தான் லைலா எக்ஸின் படைப்பிலக்கிய களம் என்பது என் அனுமானம்.   

தமிழ் சூழலில் பாலியல் சார்ந்த கதைகள் எழுதிய கு..ரா, தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா, ஜெ.பி.சாணக்யா, லக்ஷ்மி சரவணகுமார், வாமு கோமு என்று ஆண் படைப்பாளிகளின் பெரிய தொடர்ச்சியே இருந்த போதும், பெண்களால்  பாலியல் சார்ந்து எழுதப்பட்ட உடலரசியல் கவிதைகளில் காந்தாரமாக வெளிபட்ட அளவிற்கு புனைக்கதைகளில் வரவில்லை என்பது என் புரிதல்.   இக்கதைகளில் தன்னியல்பாக நிகழும் பெண்ணின் சுய இன்ப செய்கைகளும், தன் அகங்காரம், விருப்பு வெறுப்பு சார்ந்த மூர்க்கமான உடலுறவுகளும், பேருந்து, திரையரங்குகளில் ஆண்களால் நிகழ்த்தபடும் சில்மிசங்களை ரசிக்கிற, கூட்டு களவியில் ஈடுபடும் பெண்ணை பற்றியெல்லாம் கதைகளில் வாசிக்கும் போது கலாச்சார காவலர்களுக்கும், இலக்கிய ஒழுக்க சீலர்களுக்கும் கடும் அதிர்ச்சியைத் தரலாம் என்றாலும் இவை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. இவை நாம் கண்டும் காணதது போல் கடந்து போக நினைக்கும் உண்மைகள். இந்த உண்மைகளை தனக்கு வசப்பட்ட அடர்த்தியான மொழியில் லைலா எக்ஸ் பதிவு செய்திருக்கிறார்

தன் இலக்கிய ஆசானாக சாரு நிவேதிதாவையும், இத்தொகுப்பை ஷோபா சக்திக்கும் சமர்பணம் செய்துள்ளார்இதனால் பாலியல் சார்ந்து எழுதும் துணிவை சாருவிடமும் சிறுகதை என்ற வடிவத்தை கையாளும் பிரஞ்சையை ஷோபாவிடமும் கற்றிருப்பது தெரிந்தாலும் கூட ஜெ.பி.சாணக்யாவின் படைப்புலகிற்கு நெருக்கமானவராகத் தான் லைலா எக்ஸை என்னால் அடையாளம் காண முடிகிறது.

இத்தொகுப்பில் "வன்மம்" என்ற கதை சாணக்யாவின் "ஆண்களின் படித்துறை" என்ற சிறுகதையின் நேர்எதிர் பிம்பம் போல் உள்ளது. இரண்டு கதைகளிலுமே தாய்- மகள் இருவரின் ஈகோ மோதலை தான் பிரதானப்படுத்துகிறது என்றாலும் சாணக்யாவின் கதையில் வரும் தாய் கருணையானவள். டிங்கு என்ற பைத்தியத்தின் உடலியல் தேவையை கூட அவளால் புரிந்துக் கொண்டு ஒத்துழைக்க முடிகிறது. ஆனால் லைலா எக்ஸ் கதையின் தாய் தந்திரமானவள். இரவில் வயதுக்கு  வந்த மகள் இருக்கவே குடிகார கணவனின் சந்தேக புத்தியால் அடிவாங்கவும், சபல புத்தியால் உறவு கொள்ளவும் பகல் பொழுதுகளில் எதுவும் நடக்காதது போல் நடிக்கவும் அவளால் முடிகிறது. இந்த தாய்களின் குணம் அவர்களின் மகள்களை எவ்வாறு பாதிக்கிறது. இதற்கு அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதில் தான் இருவரின் தனிதன்மை வெளிப்படுகிறது

வன்மம், பதின்மம் × உடல் = இவ்வாழ்வு என்ற கதைகளும் கூட ஒரே தளத்தில் எழுதப்பட்ட கதைகள் தான். வன்மம் கதையில் தன்னுடலை தன் தாயின் மீதான ஆங்காரத்தில் அவளை பழி வாங்கும் நோக்கில் காமத்தில் திளைத்து யாரால் கருவுற்றோம் என்பது தெரியாமல் தாயிடமும் சமூகத்திடமும் தோற்றவள், பதின்மம் × உடல் = இவ்வாழ்வு கதையின் முடிவில் கல்வியால் வாழ்க்கையை வெற்றி கொள்கிறாள் என வாசிக்கும் போது இந்த புனைகதைகள் பாலியல் வேட்கையின் வீழ்ச்சிகளை மட்டும் பேசாமல் அவற்றைக் கடக்க உதவும் நம்பிக்கைகளைக் குறித்தும் அக்கறை கொள்வதை உணர முடிகிறது

"ஜெர்சி கனவுகள்" என்ற கதை கூடைப் பந்தாட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் இரண்டு பயிற்சியாளர்களை (கோச்) கோல்கம்பமாகவும் தேசிய அளவில் விளையாடும் பெண்ணை பந்தாகவும் மாற்றி காதல், காமம் சார்ந்த அவர்களின் புதிரான நடத்தைகளைப் பற்றி லைலா எக்ஸ் தன் புனைவில் விளையாடியிருக்கிறார். அந்த ஆட்டம் வாசகனையும் வசீகரிக்கிறதுதொகுப்பின் தலைப்பு கதையான "பிரதியின் நிர்வாணம்" காலங்காலமாய் பெண்ணுடலையும், அவளை கவர ஆண்கள் செய்யும் அத்தனை நடைத்தைகளையும் களைத்து போட்டு பகடி செய்கிறது. டைட்டானிக் படத்தில் ஜேக்கை நிர்வாணமாக்கி ரோஸ் வரைந்தால் என்ற சித்திரம் போது லைலா எக்ஸின் படைப்பிலக்கிய அரசியலை புரிந்து கொள்ள. நுண்கலைகள் அனைத்தும் பெண்ணின் உடலையே பிரதானப்படுத்தும் போது அதன் எதிர் வினையாய் ஆணுடலை அவ்வாறே ஒரு பெண் பிரதி செய்யும் போது வெளிப்படும் அபத்தங்கள் நம்மை குற்றவுணர்விற்கு தள்ளுகிறது.

 பொதுவாக மென்பொருள் துறையில் பணிசெய்யும் பெண்கள் குடிக்கும், பாலியல் வேட்கைக்கும் அடிமையான பப் கலாச்சாரத்தில் திளைப்பவர்கள் என்பதான பார்வையே திரைபடங்களும், சமூக ஊடகங்களும் கட்டமைத்திருக்கிறது. இத்துறையில் பணிபுரியும் விநாயக முருகனின் “ராஜீவ் காந்தி சாலை” நாவலில் கூட அப்படியான பெண்சித்திரமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுபுத்தி கருத்தாக்கத்தை சிதைக்கும் பார்வையை "கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது" என்ற கதை தருகிறது. மென்பொருள் துறையில் பணிசெய்யும் ஒரு தலித் பெண்ணின் திருமண வாழ்க்கை காதல், கலப்பு மணம் என்று வெற்றிகரமாக ஆரமித்து பிராமண கணவனின்  ஆச்சாரக் குடும்பத்தில் தன்னை பொருத்திக் கொள்ளும் போராட்டத்தில் தான் எத்தனை சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  புகுந்த வீட்டில் தான் ஒரு ATM மெஷினாகத் தான் கருதப்படுகிறோம் என்ற கசப்பும், கதையின் இறுதியில் நோயுற்று படுக்கையில் கிடக்கும் தன் மாமியாரின் மூத்திரப்பையைச் சுத்தம் செய்யும் காட்சி வேலை சார்ந்து எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தலித் பெண்களின் கலைக்க முடியாத ஒப்பனையை இக்கதை மிக அழுத்தமாக சொல்கிறது.

“முத்தி” கதையில் வரும் பெண் அரசு பள்ளியில் தற்காலிகமாக துப்புறவு பணி செய்பவள். அப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் இரண்டாம்  மதிப்பெண் வாங்கிய தன் மகளை கல்வியால் உயர்த்த கனவு காண்பதும் அந்த கனவை சிதைக்கும் பள்ளி தலைமையாசிரியரின் உயர் சாதி மனோபாவமும் . முத்தி போன்ற தாய்மார்களின் தியாகத்தால் மேலெழுந்து வரும் மகள்கள் பிற்காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ சென்றடையும் இடம் தான் "கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது" கதையின் களம் என தோன்றுகிறது. முத்தியின் மகள் தான் கனகா என்கிற லட்சுமி என்ற புரிதல் எனக்கு தகழியின் “தோட்டியின் மகன்” நாவலின் முடிவை நினைவுபடுத்துகிறது.

எந்த வித வெளியீட்டு ஆரவாரங்களும் சமூக ஊடகங்களில் மிகையான விளம்பரங்களும் இன்றி தன் படைப்பின் மீதான நம்பிக்கையோடு சிற்றிதழ் பாரம்பரிய பின்னனியோடு வெளிவந்திருக்கும் இப்படைப்பு அதிகம் பேசப்படும் என்பது என் எதிர்பார்ப்பு. எந்த வித பரிந்துரைகளும் அற்று நானே கண்டு கொண்ட நல்ல தொகுப்பு என்ற பெருமிதத்தோடு நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.