Sunday 1 October 2023

முறிந்த ஏப்ரல்

 


இந்த நாவல் கானூன் என்று அழைக்கப்படும் பண்டைய அல்பேனிய சட்ட விதிகள் மற்றும் இரத்தப் பகையின் பாரம்பரியத்தைப் பற்றி பேசுகிறது. தனது சகோதரனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக கானூன் சட்டத்தின் கீழ் ஒரு கொலை செய்ய நிர்பந்திக்கப்படும் ஜார்க்கின் (முப்பது நாள்) வாழ்க்கையும்,  எழுத்தாளரும் இளம் கணவருமான பெஸ்ஸியன் வோர்பஸி தன்  மனைவி டையானாவோடு தேனிலவு பயணமாக இந்த உயரமான பீடபூமிக்கு வரும் போது கணவன் தன் மனைவிக்கு கானூன் சட்டத்திட்டங்கள், குனான் பற்றி அனைத்தையும் கூறுகிறான். 

அவர்களின் பயணத்தின் போது அவர்கள் ஜார்க்கை சந்திக்கிறார்கள். பேரழகியான டையானாவின் மீது ஜார்க்கின் ஈர்ப்பும் முப்பது நாட்களுக்குப் பின் கொல்லப்படவிருக்கும் ஜார்க்கின் மீதான டையானாவின்  பரிவும் மெல்லிய காதலாக உருமாறி, இருவரும் மறுசந்திப்பிற்கானத் தேடலில் இருக்கிறார்கள். இந்த தேடல் கானூம் சட்டத்திட்டங்களை மீற வைக்கிறது. அந்த மீறலின் விளைவு தான் நாவலின் முடிவு. 

இந்த நாவலின் கொடூரமான மற்றும் கவர்ச்சிகரமான பகுதி இரத்த பகையைச் சுற்றியுள்ள முழு பொருளாதாரம்.  இந்த கொலைகளைச் சுற்றி குறிப்பிட்ட விதிகள் மற்றும் செயல்முறைகள் உள்ளன. அவர்கள் பழிவாங்குவதற்காக இறந்தவர்களின் சட்டையை தங்கள் வீடுகளில் தொங்கவிடுகிறார்கள். மரணத்திற்குப் பதிலாக காயங்கள் ஏற்பட்டால், குறிப்பிட்ட இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதற்கென  நடுவர், மருத்துவர் உள்ளடக்கிய குழு சேதம், இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்கிறார்கள். கொலைக்கு தனியே வரி செலுத்த வேண்டும், ஒரு குடும்பத்தில் நடந்த அனைத்து கொலைகள் மற்றும் பகையின் வரலாற்றை பதிவு செய்யும் புத்தகம் உள்ளது. இதை கண்காணிப்பவரும் , இரத்த வரி வசூலிப்பதற்குப் பொறுப்பாளராகவும் இருப்பவர் அரசனை அடுத்து அதிகாரம் மிக்கவர். . 

இரத்தப் பகையைத் தவிர, அன்றாட வாழ்க்கைக்கான பிற நடத்தை நெறிமுறைகள் உள்ளன. கானூன் கீழ் உள்ள ஒரு வீட்டில் தங்கும் விருந்தினர் பாதி கடவுளுக்கு நிகரானவர்.  இந்த மக்கள் விருந்தினருக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறார்கள், அவர்களுக்காக தியாகம் செய்ய தயாராக உள்ளனர். அவர்களின் மரணத்திற்கு பழிவாங்கவும் (விருந்தினர் அவர்களின் பாதுகாப்பில் இருக்கும்போது இறக்க நேரிட்டால்) தயாராக உள்ளனர். அப்படியான ஒரு பழி தான் ஜார்க்கின் குடும்பத்தை மூன்று தலைமுறையாகத் தொடர்கிறது. .  

நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு வழக்கம் திருமணத் தோட்டா வழங்கும் நிகழ்வு.  மணமகளின் குடும்பம் திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு திருமணத் தோட்டாவை வழங்குகிறது.  எக்காரணம் கொண்டும் கணவனை விட்டு விலக மனைவி முடிவெடுத்தால், கணவன் அந்த தோட்டாவால் அவளை சுடலாம், அவளுடைய மரணத்திற்கு எந்த பழிவாங்கலும் தேவையில்லை. பெண்களுக்கு இச்சமூகத்தில் எந்தக் கருத்தும், அந்தஸ்தும் கிடையாது..  

இந்த நாவலை வாசிக்கும்  போது, ​​கானூனின் இந்த முழுக் கருத்தும் கற்பனையாக இருக்குமா என  நினைத்தேன். ஆனால் வடக்கு அல்பேனியாவில் இன்றும் புழக்கத்தில் இருப்பதாகத்  தன் மொழிபெயர்ப்பு குறிப்பில் பா.வெங்கடேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். அவரின்  மொழிபெயர்ப்பு 
மிகச் சிறப்பாகவுள்ளது. நிறைய வரிகளையும் வார்த்தைகளையும் அடிக்கோடு இடும் படி கவிநயத்தோடு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

இந்த நாவலாசிரியர் இஸ்மாயில் கதாரே அல்பேனியாவின் சிறந்த எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், திரைக்கதையாசிரியர், நாடக ஆசிரியர். அல்பேனிய மக்களின் வரலாற்று அனுபவங்கள், நவீன சூழல்களில் தொன்மங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அல்பேனியாவின் சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றைப் பற்றி தன் புனைவுகளில் எழுதியவர்.

மேன் புக்கர் சர்வதேச விருது உள்ளிட்ட பல விருதுகளை தன் ஆக்கங்களுக்கு பெற்றிருப்பவர். 15 ஆண்டுகளாக நோபல் பரிசுக்கான பரிந்துரை பட்டியலில் இருப்பவர். அல்பேனியாவில் இவரின் ஒரு நூலாவது இல்லாத வீட்டை பார்ப்பது அரிது என்கிறது நியூயார்க் டைம்ஸ்". 

அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல். நண்பர்களுக்கு இந்த நாவலைப் பரிந்துரைக்கிறேன். 

No comments:

Post a Comment